search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர் பிரச்சனை"

    • காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

    இதற்கிடையே நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கன அடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது.

    தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

    • தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
    • கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலையில் நடைபெற உள்ளது.

    மத்திய மந்திரியை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.கே.வாசன் (த.மா.கா.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஏ.கே.பி.சின்னராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    அமைச்சர் துரை முருகனும் இன்று காலையில் டெல்லி சென்றார்.

    மத்திய மந்திரியை சந்திக்கும் போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

    • பல காரணங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.
    • கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடாததற்கு  உண்மைக்கு புறம்பாக பல காரணங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

    அதன்படி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி மனு கொடுப்பதுடன் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

    • இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.

    மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்கள்.

    தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

    தாளவாடி:

    தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின.

    கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில் இன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் பாக்யராஜ் தலைமையில் 38-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாவாடி அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநில விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சாம்ராஜ்நகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 38-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் தமிழக-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    • மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
    • ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா’ என்று கோஷமிட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது நாள் முதல் கே.ஆர்.எஸ். அணை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா என பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    கே.ஆர்.எஸ். அணையின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பெண்கள் தலையில் காலி குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் உள்ள மினி விதான சவுதா முன்பு கன்னட அமைப்பினர், விவசாயிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நெற்றியில் நாமம் போட்டு மணி அடித்து தண்ணீருக்காக யாசகம் கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா' என்று கோஷமிட்டனர்.

    இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ரத்தத்தால் கடிதத்தில் கையெழுத்திட்டு கவர்னருக்கு அனுப்பும்படி பா.ஜனதாவினர் மாவட்ட கலெக்டர் குமாரிடம் கொடுத்தனர்.

    தொடர்ந்து 8-வது நாளாக தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

    ஆனால் கர்நாடகா அரசு போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீரை முழுமையாக திறந்து விட மறுத்து வருகிறது.

    கடந்த 9-ந்தேதி வரை 37.9 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீர்தான் கர்நாடகா வழங்கியது.

    அதனால் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 38 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு உடனே திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்து விடுமாறு கூறியதின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டது. ஆனால் இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் அளவை கர்நாடகம் குறைத்து விட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநில கருத்தையும் கேட்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.

    குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கேட்டும் முறைப்படி கர்நாடகா தண்ணீர் தராததால் நெற்பயிர்கள் கருகுவதை சுட்டிக்காட்டும் தமிழகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

    இதே போல கர்நாடகா அரசின் சார்பில் அவர்களும் தங்களது கருத்தை வலியுறுத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனே பரிந்துரைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது.

    கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி தண்ணீரை பிலிகுண்டுலுவில் அளவீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவுபடி ஜூன் வரை ஆகஸ்டு 11-ந்தேதி முதல் தமிழ்நாட்டுக்கு 53.77 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு வெறும் 15.73 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துஉள்ளது. 37.97 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.

    இதையடுத்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் பங்கை கர்நாடகா தர வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. அதுபோல காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பிடமும் வலியுறுத்தப்பட்டது. என்றாலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் டெல்லியில் நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள் காவிரியில் 37.97 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    ஆனால் கூட்டத்தில் அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்தில் இருந்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆய்வு கூட்டத்தில் தமிழக டெல்டா பாசனத்தை காப்பாற்றும் வகையில் முடிவுகள் எட்டப்படாததால் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அளிக்க கர்நாடக அரசுக்குத்தான் மனம் இல்லை" என்று கூறி இருந்தார்.

    கோர்ட்டு மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து நேற்றும் இன்றும் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    இன்றும், நாளையும் சுப்ரீம் கோர்ட்டு விடுமுறையாகும். எனவே திங்கட்கிழமை காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். திங்கட்கிழமை அவர்கள் தாக்கல் செய்யும் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 114.571 டி.எம்.சி. ஆகும். தற்போது 4 அணைகளிலும் சுமார் 94 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மொத்த நீர் இருப்பில் இது 82 சதவீதம் ஆகும்.

    கர்நாடகாவிடம் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் தமிழகத்துக்கு உரிய பங்கை திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால்தான் டெல்டா மாவட்டங்களில் காய்ந்து கொண்டிருக்கும் பயிர்களை காப்பாற்ற முடியும்.

    • கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.
    • இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் ஆகி வரும் நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளார்.

    அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று (புதன்கிழமை) அவர் சென்னையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்.

    சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதையடுத்து அவர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சியினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டது.

    இந்த ஓராண்டு காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தோம். அ.தி.மு.க. 3 ஆக, 4 ஆக போய் விட்டது. அதில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்து போய் விட்டது என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த பணியை எழுச்சியோடு மேற்கொண்டு ஒன்றரை மாத காலத்தில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்து இருக்கிறோம்.

    இனி அ.தி.மு.க. வெற்றிடம் கொண்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளோம். இனி அந்த வார்ததையை யாரும் பயன்படுத்த வேண்டாம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது.

    அதுவும், இளைஞர்கள், சகோதரிகள், கழக உடன்பிறப்புகள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க.தான். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி.

    சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வுக்கு 'பி' அணியாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 75 நாட்களில் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அ.தி.மு.க. உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அடுத்து வருகின்ற தேர்தலுக்கு அடித்தளமாக எங்களுடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தினார். அவரது வழியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றது.

    அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்களுடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்தோம். 22 நாட்களும் பாராளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது சரித்திர சாதனை.

    அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் காவிரியில் நமக்கு எவ்வளவு பங்கு நீர் கிடைக்குமோ அதை கொடுத்தனர். இப்போது காங்கிரசும் தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன. ஒரே கூட்டணியில் உள்ளன. முதலமைச்சர் ஏன் காவிரி நீரை திறந்து விடுமாறு வற்புறுத்தக்கூடாது.

    இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பேன் என்று சொல்லும் முதலமைச்சர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு பேசி நமக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை ஏன் பெறவில்லை? இது விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி.

    கர்நாடகா மாநிலம் அமைதியாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மேகதாது பற்றிய செய்தியை வெளியிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

    மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பற்றி எங்களின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக இருந்தது. 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினோம். மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டு காலம் முதன்மையாக இருந்து விருதுகளை பெற்றோம்.

    இன்று 4-வது இடத்துக்கு சென்று விட்டது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.

    இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார். அவரிடம் நிர்வாக திறமை இல்லை. 2 ஆண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது வேதனையான விஷயம். ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்க்குதான் அதன் கஷ்டம் தெரியும். அந்த குடும்பத்தினருக்கு தான் வலி தெரியும். அதை இந்த அரசு உணர வேண்டும். உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் குழந்தைக்கு கையை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

    கடலூரில் சளி இருப்பதாக சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2 கையும் இல்லாத ஒருவருக்கு 2 கையும் பொருத்தி சாதனை படைத்தோம். இது போன்ற சாதனையை அ.தி.மு.க. ஆட்சியில்தான் பார்க்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சியில் ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. இனியாவது தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்.

    பருவமழை இன்று சரியாக பெய்யாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல ஏற்கனவே நடவு செய்த பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிக்கு சுத்தமாக தண்ணீர் போகவே இல்லை.

    மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக அரசிடம் கேட்டால் அவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். இதை பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் விரைந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் எப்படி தண்ணீர் திறந்தீர்களோ அதே போல விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவதும் இந்த அரசின் கடமை.

    சரியாக செயல்பட்டால்தான் குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

    மக்களின் நன்மை கருதி இந்த ஆட்சியில் மக்கள் படும் அல்லல்கள், துயரங்கள், துன்பங்கள், வேதனைகள், கஷ்டங்களை முதலமைச்சரிடம் ஊடக நண்பர்கள் கேள்வியாக கேட்டு அதன் மூலமாவது இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யட்டும். முதலமைச்சரிடம் கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.

    தக்காளி 1 கிலோ ரூ. 160-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் போய் விட்டது. இது மட்டுமல்ல பூண்டு, துவரம் பருப்பு உள்ளிட்ட எல்லா மளிகைப் பொருட்களும், ஏழை எளிய மக்கள் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதை பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. அப்படி இருக்கும் போது மாமன்னன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறீர்கள்.

    விலைவாசியை பற்றி கேளுங்கள். மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி பெறும் வகையில் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அப்போதைய சபாநாயகர் தனபால் நான் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார்.

    நான் நிரூபிக்கின்ற போது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக், பெஞ்சை உடைத்து ரகளையில் ஈடுபட்டுஅவரது இருக்கையில் தி.மு.க.வினர் அமர்ந்தனர். இதை மறந்து விடாதீர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வார்கள்?

    எங்களின் உள்கட்சி பிரச்சினையை வெளியில் பேச முடியாது. கழகத்தை பலப்படுத்தி வருகிறோம். விரைவாக கழகத்தின் அனைத்து பணிகளும் நிரப்பப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. தேர்தல் வருகின்ற போது நிச்சயமாக உங்களை அழைத்து எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம்.

    ஏற்கனவே நாங்கள் பா.ஜனதா பற்றி சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதே போல் காலம் கனிந்து வரும் போது நேரம் வரும் போது நிச்சயமாக எல்லாம் வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் கூட்டணி பற்றி பேச இப்போது அவசியம் இல்லை. பா.ஜனதாவுடன் உறவு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    காவிரி நீர் பிரச்சனையில் பலர் போராடியிருந்தாலும், சிறப்பான சட்டபோராட்டம் நடத்தி தீர்வை பெற்று தந்தது அதிமுகதான் என மயிலாடுதுறையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-  

    அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது. காவிரி நீருக்காக போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுகதான். 

    காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுகதான். காவிரி விவகாரத்தில் போட்ட வழக்கை சுயநலத்துக்காக திமுக திரும்பப்பெற்றது. திமுகவும், கருணாநிதியும் தமிழகத்திற்கு துரோகம் செய்தனர். 

    காவிரி நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா. இறுதி மூச்சுவரை விவசாயிகளுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம்

    திமுகவின் அலட்சியத்தால் 2007இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா, கேரளா வழக்கு தொடர்ந்தது. திமுகவின் செயல்படாத தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசு செயல்படவில்லை என கூறுகிறார். 

    இவ்வாறு முதல்வர் பேசி வருகிறார். 
    ×